Market Update: ஒரு பங்கை விற்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள முக்கிய அம்சங்கள்?

பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரித்திருந்தாலும், நம்மவர்களுக்கு ஒரு பங்கை எப்போது வாங்குவது, விற்பனை செய்வது என தெரிவதில்லை. குறிப்பாக வாங்கும்போது எப்படியோ சிலர் சரியாக தேர்வு செய்திருந்தாலும், சரியான நேரத்தில் லாபத்தை புக் செய்யத் தெரிவதில்லை. இதனால் பலரும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர்.

சந்தையில் பங்குகளை எப்போது வாங்கலாம் என பரிந்துரை செய்யும் சிலர், எப்போது விற்பனை செய்யலாம் என்பதை கூறுவதில்லை. முதலீட்டாளர்கள் பலரும் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி விடுவர். ஆனால் அது எந்த அளவுக்கு செல்லும், எந்த சமயத்தில் வெளியேறலாம் என்பது தெரிந்திருப்பதில்லை. அந்த சமயத்தில் எது உச்ச விலை என்பதையும் யூகிக்க முடிவதில்லை. இறுதியில் குழப்பமான மன நிலையில் லாபத்தில் இருந்து சரிந்து நஷ்டத்திற்கே திரும்புகின்றனர். அதிலிருந்து தப்பிக்க சில முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

விரிவான ஆய்வு?

ஒரு பங்கை வாங்குவதற்கு முன்பு அது பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் என்ன, அதன் நிதிநிலை எப்படி இருக்கிறது, அதன் தற்போதைய மதிப்பு எப்படி இருக்கிறது, அது எந்த துறையை சேர்ந்த ஒன்று, அதன் எதிர்கால தேவை எப்படி இருக்கும், குறிப்பிட்ட அந்த துறையில், நீங்கள் வாங்க திட்டமிடும் நிறுவனத்தின் சந்தை பங்கு என்ன, ஒப்பந்தங்கள் நிலைப்பாடு என்ன, வெளி முதலீடுகள், கடன் நிலவரம், ரேட்டிங்குகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி ஆய்வு செய்து அதற்கு ஏற்ப திட்டமிடுதல் அவசியம். நிறுவனங்களின் நிதி நிலை உள்ளிட்ட காரணிகள் மாறக் கூடியது. ஆக ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை, நிறுவனத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது, போட்டி நிலை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும். இதில் ஒரு நிறுவனம் எந்த நிலையில் இருக்கிறது. அதை வாங்கலாமா அல்லது விற்பனை செய்யலாமா என்பதை முடிவு செய்ய உதவிகரமாக இருக்கும்.

காத்திருந்து வெளியேறலாம்?

சில சமயங்கள் சந்தை நல்ல ஏற்றம் கண்டு கொண்டிருக்கும்போது, முதலீட்டாளர்கள் அவசர தேவைக்கு அல்லது ஏதேனும் நிதி தேவை எனும் போது, பங்குகளை விற்பனை செய்து அப்போது பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இது தவறான ஒன்று. ஏனெனில் அவசர கால நிதி என தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி அவசர கால நிதியை வைத்துக் கொள்ளாமல் பங்கு சந்தை முதலீட்டை செய்கிறார் எனில், அதுவும் தவறான ஒன்று தான். ஆக கட்டாயம் ஒவ்வொருவரும் அவசர கால நிதியை வைத்துக் கொள்ள வேண்டும். சந்தை நல்ல ஏற்றத்தை சந்திக்கும்போது காத்திருந்து வெளியேறுவது சிறப்பு.

புதிய புதிய பங்குகளில் முதலீடு?

முதலீட்டாளர்கள் போர்ட்ஃபோலியோவில் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள பங்கை காட்டிலும், முதலீட்டுக்கு உகந்ததாக வேறு ஒரு பங்கு தோன்றினால், அப்போது ஏற்கனவே வைத்துள்ள பங்கை விற்பனை செய்துவிட்டு, புதிய பங்கை தேர்வு செய்யலாம். ஆனால் சிலர் ஏற்கனவே போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்கை விற்பனை செய்யாமல், மற்றொரு பங்கிலும் முதலீடு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் போர்ட்ஃபோலியோவை பார்க்கும்போது பல பங்குகள் இருக்கும். இது தவறான பழக்கம்.
நிறைய பங்குகள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் போது எதை எப்போது விற்பனை செய்யலாம் என்பதில், கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதுவும் லாபம் குறையவும், நஷ்டத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம்.

லாபத்தில் வெளியேறலாம்!

நீங்கள் வாங்கி வைத்துள்ள ஒரு பங்கு ஏன் ஏற்றம் காண்கிறது என்பதை கூட கணிக்க முடியாத அளவுக்கு, லாபம் குறைந்துள்ள சூழலில் கூட கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டிருக்கும். ஆனால் அதை தெரிந்து கொள்ளும் முன்பே மீண்டும் பங்கு விலை சரியவும் ஆரம்பிக்கலாம். ஆக அந்த மாதிரியான சமயங்களில் குறிப்பிட்ட பங்குகளில் இருந்து வெளியேறுவது நல்லது.

செயற்கையான ஏற்றத்தில் சிக்காதீர்கள்!

பங்குகள் சில விலை மலிவாக காணப்படும் சூழலில், அவற்றின் விலையை செயற்கையாக உயர்த்திக் காட்டவும், அதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் சில நேரங்களில் தவறான அறிக்கைகளை நிறுவனங்கள் பயன்படுத்தப்படலாம். இந்த உச்சத்தை பயன்படுத்தி லாபகரமான விலையில், பங்குதாரர்கள் பங்குகளை விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் பல சிறு முதலீட்டாளர்களும் பங்கு விலை தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதால், விலையை கருத்தில் கொள்ளாமல் அதிக விலைக்கு வாங்கியிருப்பார்கள். பின்னர் பங்கு விலை சரியும் போது பெரும் இழப்பை சந்திக்கலாம். ஆக இந்த மாதிரியான சூழலில் பங்குகளை உடனடியாக விற்பனை செய்து வெளியேறுவது சிறப்பு.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.

முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *